Sunday, January 5, 2014

ஒரு துரோகத்தின் முன்னால்…

 ஒரு துரோகத்தின் முன்னால்…
ஒரு துரோகத்தின் முன்னால்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப் பற்றிச் சில குறிப்புகள்…
சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம்;
ஒருவேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம்
Hands in rain
அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்றுவிடலாமென்று
நினைத்துவிடாதீர்கள்.
அது
அன்பை… காத்திருப்பை
தியாகத்தை… துயரத்தை
ஒருபோதும்
ஏறிட்டுப் பார்க்காது.
மூக்கு நுனியில்
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெருங்கோபம்
நியாயமானதென்றாலும்,
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ
சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்.
உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும்.
அது சற்றும் பொருட்படுத்தாது
விட்டுவிடுங்கள் அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி
வாசல் வரை சென்று
வழியனுப்பிப் பாருங்கள்.
தலைகுனிந்தவாறு
விடைபெறாமலேயே
சென்றுவிடக்கூடும்.
அதிகம் கடினம் என்றாலும்
பெருங்கருணைகொண்டு
மன்னித்துவிடுங்கள்
அடுத்த நிமிடமே
அது இறந்துவிடும்!

No comments:

Post a Comment