Thursday, November 27, 2014

ஸத்குரு என்பவர் யார்?

ஸத்குரு என்பவர் யார்?

ஒருவரது மரபுரிமைப் பிழைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவந்து, உடல், உயிர், உலகம் இவை யாவும் ஒன்றினை ஒன்று தொடர்புடையவை என்பதை அறியவைப்பவரே சத்குரு ஆவார்.
மனிதன் அவனது மனத்தின் காரணமாகவே மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான். தானே "ஜீவன்" என்று உணர்ந்து தனது அஹங்காரத்தின் மேலீட்டால் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த உணர்வே மனிதனிடம் பிழைபட்டதாக உருவாகியுள்ள மாயை ஆகும். இது மனிதன் மனத்தில் தோன்றும் அறியாமை ஆகும்.
இந்த அறியாமையிலிருந்து விடுபட மனிதர்கள் தாமாகவே முயற்சிசெய்து, அதன் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்கு அவன் "சுயவிசாரணை" நடத்தத் துவங்க வேண்டும்.
இந்த அறியாமை எப்படி உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை உணர்த்துவதுதான் குரு உபதேசம்.
இதையும் தாண்டி, சத்குருவானவர், அவனது பல பிறவிகளின் அழுக்குகளையும் அவற்றின் அச்சுகளையுமே ஒரே நொடியில் விலக்கி அல்லது அழித்து, தனது பக்தனைப் பரிசுத்தமடையச் செய்கிறார்.
மனிதன் தனது அறியாமை என்னும் கணக்கைச் சரிபார்க்கத் தவறும் போதுதான். அவன் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் அல்லலுறுகிறான்.
மனிதன் தனது வாழும் காலத்திலேயே தனது பூர்வ ஜென்மக் கணக்குகளையும் சரிபார்த்து, எவ்வளவு தூரம் அவற்றைக் கழிக்க முடியுமோ அவ்வளவு தூரம் கழித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். மிச்சம் சொச்சத்தை அடுத்துவரும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அஞ்ஞானம் என்பது,
1. நான் ஒரு ஜீவன் (உயிர், ஜந்து) என்று நினைப்பது.
2. உடம்பே ஆத்மா (நானே உடல் என்பது)
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வெவ்வேறானவை
4. நான் கடவுள் அல்ல.
5. உடல், ஆத்மா என்று எதுவும் இல்லை என்று நினைப்பது அல்லது அந்த உண்மையை அறியாமல் இருப்பது.
6. கடவுள், உலகம், ஜீவன் இவையெல்லாம் ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.
இவ்வாறான அஞ்ஞானங்களை, அறியாமைகளைப் பிழைகள் என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
குருவானவர், நமக்குப் பிறவிக் கடலை நீந்திக் கரைசேர வழிகாட்டுகிறார். ஆனால், சத்குருவோ நம்மைக் கரைக்கே கொண்டு சேர்த்துவிடுகிறார். அப்படிப்பட்ட சத் குருவானவர், மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி என்ற குக்கிராமத்தில் பல வருடங்கள், பக்கிரிபோல வாழ்ந்துவந்தார். அவர், தன்னை நாடிவந்த பலருக்கும், உணவளித்து உறைவிடம் தந்து, நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து, இன்னும் சிலரை உய்வித்து, இவ்வுலகில் இயற்கையில் கலந்து, ஸர்வ வியாபியாக இன்றும் மக்களிடையே சேவை செய்துவருகிறார்.
சத்குரு என்பவர் தனது பௌதீக உடலை நீக்கிய பிறகும், தொடர்ந்து மக்கள் நலனில் கருத்துக் கொண்டு செயலாற்றிக்கொண்டிருப்பவர் ஆவார். இப்படிப்பட்ட சத்குருவினை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டே இருந்தால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன. மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது. இவ்வுலக வாழ்வில் நமது துயரங்கள் நீக்கப்படுகின்றன. ஆகவே, தங்கள் நலத்தை விரும்புவோர் ஷீரடி சாயிபாபா போன்றோரின் சத்சரிளதைகளைத் தினமும் படித்துக்கொண்டே வர வேண்டும்.
ஷீரடி சாயிபாபா எங்கு, எப்போது, யாருடைய மகனாக பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரும் தனது பூர்வீகத்தைப் பற்றிய எந்த விபரத்தையும் யாருக்கும் எப்போதும் தெரிவித்தது கிடையாது. அதைத் தெரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவும் இல்லை. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஷீரடி என்னும் கிராமத்தில் வாழ்ந்திருந்தார். 1918ஆம் வருடம், அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தமது பௌதீக உடலை நீத்துவிட்டு, தனது சூக்ஷ்ஷம உடல் வாயிலாக இந்த நிமிடம் வரை, தனது பக்தர்களிடம் உலாவந்து, அவர்களைக் காத்துவருகிறார்.
ஷீரடி சாயிபாபா தன் காலம் முழுவதும் மருத்துவராகவே இருந்து தனது மக்களுக்கு அருள்பாலித்து இருக்கிறார். இவரது சூஷ்க்ஷம சக்தி இந்த அண்டசராசரத்திற்கு அப்பாலும் பரவியிருப்பதால்தான், இன்றும் பூவுலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சத்குருமார்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிக்கிறார்கள். அவர்களை அண்டி, சராசரி மனிதர்கள் தமது பூர்வ ஜென்ம பாபங்களைக் கழுவிக்கொண்டு இருக்கும் காலத்தில் நாம் தெரிந்தே செய்த பாவங்களையும் கழுவிக்கொண்டு, நம் மனது, அறிவு, ஆன்மா என அனைத்து சங்கதி களையும் சுத்தப்படுத்திக் கொண்டு, பிறவிக் கடலைக் கடந்து கடைத்தேற வேண்டும்.
ஷீரடி பாபா ஸர்வவியாபியாக இருந்தார். இப்போதும் அப்படியே இருக்கிறார். அவர் சகல ஜீவராசிகளையும் நேசித்தார். எல்லா ஜீவராசிகளிடத்தும் ஆத்மா இருப்பதைக் கண்டவர். வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கியவர். மனிதர்களிடம் இரக்கம் கொண்டவர்.
தான் வெளிப்படையாக ஒரு பக்கிரியைப் போல வாழ்ந்தவராயினும், அவரது ஆன்மா எல்லா உயிர்களிடையேயும் சென்று வாழ்கிறது என்பது உண்மை.
ஞானிகள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இவ்வுலகிற்கு வருகைதருகிறார்கள். அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியே அமைதியாகவும் எளிதாகவும் இயற்கையுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றனர்.
இன்றளவும் ஷீரடி சாயி ஸர்வலியாபியாகவும், தான் வாழ்ந்த ஷீரடி கிராமத்தின் ஜீவ நாடியாகவும் வாழ்ந்துவருகிறார்.
ஒவ்வொரு யுகத்திற்கும் யுகதர்மம் என்று ஒன்று உண்டு. அதில் கலியுகத்தில் "தானம்" செய்வது யுகதர்மமாகக் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான மிகக் குறைந்த அளவுபொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதைப் பிறருக்குத் தந்துவிட வேண்டும். யாரிடம் இப்படிப்பட்ட யுகதர்ம நீதி சார்ந்த எண்ணம் உள்ளதோ அவர்களிடம் ஷீரடி சாயி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்.
ஷீரடி சாயிபாபா, தமக்கு என எதையும் வைத்துக்கொள்ளாமலேயே, கிடைத்தவற்றை வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டார்.
துணி, பணம் முதலியனவற்றைத் தானம் செய்ய நாம் யோசிக்க வேண்டும். ஆனால், அன்ன தானம் செய்ய, அப்போது நம்மிடம் உள்ள உணவைப் பிறர் பசியாற்றி, நாமும் உண்ணும்போது நம் மனது நிறைவடைகிறது. இதைத்தான் ஸாயி விரும்பினார். நாமும் தினமும் பசியுள்ள ஒரு மனிதனுக்கோ அல்லது ஜீவராசிக்கோ உணவளித்து, நமது சத்குருவான, ஸர்வவியாபியான சாயி பாபாவை நம்முடனே தக்கவைத்துக் கொள்வோம்.
ஞானிகளும் சத்குருவானவர்களும் தமது பௌதீக உடலிலிருந்து, புலன்களுக்கு அப்பாற்பட்ட சூஷ்ம சக்தியால், தமது பக்தர்களின் மனத்தில் ஊடுருவும் தன்மையைப் பெற்றுள்ளனர். பக்தர்கள், இவர்களைச் சரணாகதியடையும்போது, அந்த சூஷ்ம சக்தியை அவர்கள் செயல்பட வைக்கிறார்கள். இதனால், பக்தர்களின் நோய்தீர்த்தல், மனத்துன்பம், துயரங்களைப் போக்குதல், போன்ற அனைத்துக் காரியங்களையும் அவர்கள் முடித்துத் தருகிறார்கள்.
இவர்கள் பௌதீக உடலம் இவ்வுலகிலிருந்து நீங்கிய பின்பும், அதே அளவும் அதைவிட மேலேயும், எப்போதும் போலச் செயல்படும் மகான்களே ஞானிகளும் சத்குருவானவர்களும் என்பதை நாம் சாயிசத்சரிதம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடி சாயி தனது வாழும் காலத்திலும் பிறகும் பல நல்ல செயல்களைச் செய்து வருகிறார். 2018ஆம் வருடம் ஷீரடி சாயிபாபா மறைந்து நூறு ஆண்டுகளைத் தொடும் வருடமாகும்.
பாபா சில வருடங்கள் இப்பூவுலகில் இருந்தாலும், அவர் புகழ் திக்கெட்டும் பரவிக்கிடந்தது. அவரை, வண்டுகள் போல பக்தர்கள் மொய்த்தனர். இன்னும் ஷீர்டி பாபா பலரைத் தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கிறார். நாளக்கு நாள் ஷீரடி நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பாபாவின் துனி (நெருப்பு) நமது பாபங்களைப் பொசுக்கும் நெருப்புக் குண்டமாகும். அதிலிருந்து கிடைக்கும் விபூதி (யுதி) நமக்கு நோய்தீர்க்கும் மருந்தாகும். ஷீரடி பாபாவின் மகிமைகளைக் கேட்டு, ஆங்காங்கே மக்கள் பாபாவின் கோயில் தலங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கெல்லாம் பாபாவை மக்கள் மனமுவந்து, மனமுருகி ஏற்றுக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் அவர் உடனே வந்து தன் மக்களைப் பாதுகாக்கின்றார்.
"அல்லா மாலிக்" என்று இறைவன் ஒருவனே என்ற அத்வைதத் தத்துவக் கொள்கைகளைத் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டிய மகான் ஷீரடி பாபா என்பதில் ஐயமில்லை.
உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் ஆத்ம பாவனையுடன் நாம் காணப் பழகும்போது, வேற்றுமைகள் மறைந்துவிடுகின்றன. இந்த அத்வைத, ஆத்மபாவனையே பிராமணனை இன்னமும் இவ்வுலகில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பிரம்மஞானத்தை வேண்டியும் பர தத்துவத்தைத் தரிசித்தும், நமக்கு வழிகாட்டிகளான ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளைப் பின்பற்றியும் எல்லாவற்றையும்விட, எளிமையாக நாடி, நமது பாவங்களைக் கழுவி நமது ஆத்மாவை ஒளிபெறச் செய்யும் சத்குருவான ஷீரடி பாபாவைத் தினமும் தொழுது நமது வாழ்நாளிலேயே நமது கர்மாக்களைத் தொலைத்து, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர்வோமாக!
கட்டுரையாளர்:
திருமதி. பாகீரதி இராமனாதன்
கட்டுரை ஆதாரம்: சாயிசத் சரிதம்

Wednesday, November 26, 2014

உதடுகள் உச்சரிக்கட்டும்!

என் இறைவனே சாயி பாபா!
என் மீது கருணை காட்டுங்கள் பிரபு! எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள்.
கவலைகளாலும் துன்பத்தாலும் கடனாலும் அவமானத்தாலும், அலட்சியப்படுத்தப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் நொந்து நைந்துபோன இதயத்தை மட்டுமே வட்டும் ஒட்டும் போட்டு வைத்திருக்கிறேன். இதை எனது அர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு உதவி செய்யுங்கள் பிரபு!
என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்துவிடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள்.
மனம் சொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் குடும்பத்தின் நிம்மதி பறிபோய்விட்டது. நாங்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு மகிழ்ச்சியோடு பேசிக் கொண்ட நாட்கள் மாதங்களாகி விட்டன.
என் கையை வைத்தே கண்களை குத்தச் செய்த நிகழ்வுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் உள்ளவர்களாலும், அருகில் இருப்பவர்களாலும் ஆபத்தினருகில் தள்ளப்பட்டிருக்கிறேன்.
கடனாலும், தடையாலும், தோல்வியாலும் துவண்டு போன நிலையிலிருக்கும் என்னை கண்ணெடுத்துப் பாருங்கள் என் கடவுளே! என்னால் வளர்க்கப்பட்டவர்களும், என் உதவிக்காகக் காத்திருந்தவர்களும் என்னைப் புறக்கணித்தார்கள். நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினார்கள்.
என்னை உண்மையாக நம்பியவர்களும் இப்போது தடுமாறுகிறார்கள். எனது நம்பிக்கை இழந்து போகும் செய்திகளால் நான் கவலைப்படுகிறேன், தேற்றுவார் யாருமின்றி தத்தளிக்கிறேன்.
போற்றியவர்கள் தூற்றவும், நம்பியவர்கள் விலகவும், விரும்பியவர்கள் வெறுக்கவும் ஏற்ற சூழல்களை உருவாக்கிவிட்டார்கள்.
விரோதிகள் ஆயுதங்களோடு காத்திருக்கிறார்கள், துரோகிகள் நான் வரும் வழியில் பள்ளம் தோண்டி, அதை இலைகளால் மூடி மறைத்து என்னை வீழ்த்திட பதுங்கியிருக்கிறார்கள்.
ஆபத்தில் கதறிக் கூப்பிட்ட கஜேந்திரனைப்போலக்கூட கத்த முடியாமல், துக்கத்தால் அடைபட்ட தொண்டையுடன் மனதுக்குள் கதறுகிறேன்.
என் இறைவனே சாயி நாதா! என்னை கைவிட்டு விடாதீர்கள்.
பூர்வங்களில் உங்களோடு இருந்ததையும், உங்கள் நாமத்தை இடை விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்ததையும் மறந்துவிடாதீர்கள். நான் உங்களையே எனது பலமாகக் கொண்டிருக்கிறேன். என்னை தாக்க வருவோருக்கு உங்களையே கேடயமாகக் காட்டி என்னை காப்பாற்றிக்கொள்ள முனைகிறேன்.
எல்லோரும் கைவிட்டாலும், பெற்றோர், உடன் பிறந்தோர் வெறுத்து ஒதுக்கினாலும் என்னை மாறாத அன்புடன் நேசித்து உதவி செய்கிறவர் நீங்கள் என்பதை பிறருக்குத் தெரியபடுத்துங்கள்.
தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள்.
எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்துகொள்ளட்டும்.
என்னை நிர்க்கதியாக்கி தனிமையில் விட்டு, எனது சோகமுடிவுக்காக காத்திருப்பவர்கள் ஏமாந்து போகட்டும். மந்திரத்தாலும் தந்திரத்தாலும் என்னை மயக்கி கொள்ளையிடவும், கொல்லவும் முனைகிறவர்கள் கண்களுக்கு என்னை மறைத்து, மந்திர தந்திரக் கட்டுக்களில் இருந்து என்னை விடுதலை செய்யுங்கள்.
என்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்துகொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.
துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக்கொண்டு இருக்கிறேன். எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள்.
எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள். இந்த ஏழையிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள்.
எனது புலம்பல்கள் பாடல்களாகவும்,எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத்தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும்..
நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா!
இந்தப் பிரார்த்தனைகளோடு தங்கள் திருவடிகளை சரணடைகிறேன்.
ஜெய் சாய்ராம்.

Monday, November 24, 2014

ஷீரடி சாய் பாபாவின் இறுதி ஊர்வல புகைப்படங்கள்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.



Saturday, August 2, 2014

அன்பர் ஒருவரின் கேள்வி: கோபம் என்பது என்ன ?

சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம்
சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?
ஓஷோவின் பதில்: கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது
விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை
தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற
விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை.
அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா
என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது
விளையாட்டுத்தனமாகவும் இரு.
விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில்
அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது
விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது,
கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது
தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன
வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும்
தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே
கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒரு
புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும்
அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.
--- ஓஷோ ---

Tuesday, July 29, 2014

மகிழ்ச்சியின் சாவி மலைப்பிரசங்கம்....

மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு மாறுவதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சுட்டிக்காட்டுகிறது. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்றுக்கொண்ட நிலையைத் தீக்‌ஷை பெறுதலாக இந்து தர்மம் சுட்டிக்காட்டுகிறது. ஞானம் பெற்று நிர்வாணம் அடைதலைப் புத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவம் ‘ஞானஸ்நானம்’ பெற்றுக்கொள்ளுதலைக் கடைப்பிடிக்கிறது.

இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் எல்லையாக இருப்பது யோர்தான் நதி. இந்த நதியில் இறங்கி, யோவான் தீர்க்கதரிசியால் ‘ஞானஸ்நானம்’ எனும் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார் இயேசு. அப்போது அவருக்குச் சுமார் 30 வயது. அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பிறகே கிறிஸ்து ஆனார்; அதன் பொருள் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” (லூக்கா 3:21, 22) என்பதாகும். அதன் பிறகு மூன்றரை ஆண்டுக் காலம் இயேசு தெய்வீக நிலையில் நின்று போதனைகள் செய்யத் தொடங்கினார்.

அவரது போதனைகளில் மிகப் பெரியதாகவும் மிகமிக முக்கியமானதாகப் போற்றப்படுவது அவரது மலைப்பிரசங்கம் (Sermon on the Mount). மனித குலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கான பாதையை அவர் மலைப்பிரசங்கத்தில் செய்த போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு தனது நூலில் 5 முதல் 7 வரையான அதிகாரங்களில் மலைப்பிரசங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இவற்றில் காணப்படும் வசனங்கள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கின்றன. எனினும் மலைப்பிரசங்கத்தின் போதனைகள் இங்கே சுருக்கமாகத் தரப்பட்டிருக் கின்றன. முடிந்தவரை விவிலிய மொழி சிதையாவண்ணம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை உங்கள் பொக்கிஷ அறையாகிய இதயத்தில் சேமித்துக்கொள்ளுங்கள்

உப்பும் ஒளியும்

மக்கள் கூட்டத்தைப் பார்த்த அவர், மலைமீது ஏறினார்; அவர் உட்கார்ந்தபோது, சீடர்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் இயேசு:
“நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு உவர்ப்பிழந்துபோனால், அதற்கு எப்படி மீண்டும் உவர்ப்பூட்ட முடியும்? வெளியே கொட்டப்பட்டு மனிதரால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறெதற்கும் அது உதவாது.
“நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; உங்கள் கண் பொல்லாததாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளடைந்து இருக்கும்.
மலைமீது இருக்கும் நகரம் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள்.

கோபமும் சமாதானமும்

“கொலை செய்யாதீர்கள்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிப்பார்;
உங்கள் காணிக்கையைச் செலுத்த ஆலயத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையைச் செலுத்தும் முன் முதலில் அவரிடம் போய்ச் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
“உங்கள்மீது வழக்கு தொடுக்கிறவரோடு நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகும் வழியிலேயே விரைவாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்.

எதிரிகள் நண்பர்களே

“‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்களுக்குத் தீங்கு செய்கிறவருக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; வட்டியில்லாமல் கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்
“‘சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர் களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பொழியச் செய்கிறார்

விளம்பரம் வேண்டாம்

“மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தானதர்மம் செய்யும்போது, தம்பட்டம் அடிக்காதீர்கள்; உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அப்போது, நீங்கள் செய்யும் தானதர்மம் மற்றவர்களுடைய பார்வைக்கு மறைவாக இருக்கும்; எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் நீங்கள் செய்வதைப் பார்த்து உங்களுக்கு உரிய பலனை அளிப்பார்.

நினைப்பும் நிஜமும்

“வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இச்சை உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் உள்ளத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.

கவலை வேண்டாம்

“ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், எஜமானன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பார்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவர். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.

அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உங்கள் உயிரும் உடையைவிட உங்கள் உடலும் அதிக முக்கியம் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; என்றாலும், உங்கள் வானுலகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?

அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.

Thursday, July 10, 2014

உன் கர்மாக்களை......

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படாதே. அவர்கள் உன் கர்மாக்களை, உனது பாவங்களை உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்.

நீ இழந்து போனதையும், தொலைத்துவிட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். என் கண்கள் காணாமல் எதுவும் நடக்க முடியுமா? இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும். பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும் மீண்டும் உன்னிடமே வந்துசேரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பதால்தான்!

என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ எனக்காகப் பொறுமையாக காத்திரு. என் அருள் உன்னை அணுகுவதற்கு மனதை என்னிடம் திறந்துகொடு. - ஶ்ரீ சாயியின் குரல்.

Wednesday, July 9, 2014

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!



-------------------------------------------------------------------
1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)



தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..
துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?
எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது.

Thursday, May 15, 2014

Saibaba

முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல, சாதனையைத் துவங்கிய உடனே ஏதேதோ தடங்கல்கள், வேண்டாத எண்ணங்கள், வெறுப்புணர்வு போன்றவை ஆரம்பமாகின்றன. அவைகள் கர்மாக்களின் வடிவங்களே. அதற்காக உங்கள் பாதையை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் வழியில் அவைகளை வரவிடு. உங்கள் சித்தத்தை என் பாதங்களின் மேல் ஸ்திரமாக வைத்துவிடு. சபல சித்தனாக இராதே. உங்களுக்கு சந்தேகமற்ற விசுவாசம் என் மேல் இருந்தால் உங்கள் சாதனைகளில் உங்களை வெற்றி பெறச்செய்கிறேன். உங்களுக்கு அந்த சக்தியை கொடுக்கிறேன்.உங்கள் குறிக்கோளை அடையச் செய்யும் பொறுப்பு என்னுடையதாக இருக்கும். எப்படிப்பட்ட உதவி வேண்டுமானாலும் நான் உங்களுக்குச் செய்கிறேன். உங்கள் லட்சியம் நானாக இருக்கட்டும். - ஸ்ரீ சத்குரு வாணி.

Geethai

Sunday, April 20, 2014

கவலை ஏன்

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே  கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ சாயி திருவாய் மொழி

Thursday, April 17, 2014

சிலுவையில் சொன்ன ஏழு வாசகங்கள்.....

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சிலுவையில் மரித்த சம்பவத்தை ‘புனித வெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் அனுசரித்து வருகிறார்கள். புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு சிலுவையில் தொங்கியபோது சொன்ன ஏழு வாசகங்களைக் குறித்து பிரசங்கிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த ஏழு வாசகங்களையும் அதன் அர்த்தங்களையும் கவனிப்போம்.

1 “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)

ஒரு சிறு குழந்தை தவறு செய்யும்போது அறியாமல் செய்து விட்டது என்று சொல்லி, சுலபமாக நாம் மன்னிப்பதுபோல, இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்கிறார். அவரது கொலைக்குக் காரணமாக இருந்த ரோம அதிகாரிகளும், யூத மக்களும், அவரை சிலுவையில் அறைந்த போர்ச் சேவகர்களும் எப்படி இதை அறியாமல் செய்திருக்கக்கூடும்? அதுவும் அந்த நாட்டின் மிகக் கொடூரமான குற்றவாளியான பரபாஸ் என்பவனை விடுதலையாக்கி, நன்மைகளை மாத்திரம் செய்துவந்த இவரைக் கொலை செய்தவர்கள் எப்படி அறியாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்ல முடியும்?
உண்மை என்னவென்றால், அன்றைக்கு நடந்தது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு காரியம். இருளின் சக்திகள் இந்த மனிதருடைய மனக்கண்களைக் குருடாக்கி, இவர்களது இருதயத்தைக் கடினப்படுத்தி, இப்படி ஒரு கொடூரச் செயலைச் செய்ய ஏவின. தங்களுடைய சுயபுத்தியின்படி செயல்படுகிற எவரும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் கொடூரமாகச் சிலுவையில் அறைய மாட்டார்கள். ஆகவேதான் இயேசு, ‘இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்துவிட்டார்கள்’ என்று சொல்லி மன்னிக்கிறார்.
அது மட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தது என்று வேதம் கூறுகிறது. இவரை சிலுவையில் அறைந்த கைகள் மட்டும்தான் அக்கிரமக்காரரின் கைகள் என்றும், இதற்கான திட்டமும், தீர்மானமும் கடவுளுடையது என்றும் வேதம் கூறுகிறது. மனு வர்க்கத்தின் பாவத்திற்கு இயேசுவைச் சிலுவையில் பலியாக்கக் கடவுள் சித்தம் கொண்டிருந்தார். ஆகவேதான் இந்தச் சம்பவம் நடந்தது.

2 “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)

இரண்டு திருடர்களுக்கிடையே இயேசு சிலுவையில் தொங்கினார். இவர்கள் இருவரும் இரண்டு விதமானவர்கள் என்பதை கவனிக்கவும். அதில் ஒருவன் இந்த நல்லவருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து, அவர் யார் என்பதையும், இது ஏன் அவருக்குச் சம்பவித்தது என்பதையும் புரிந்துகொண்டு, அவனது மரணத் தறுவாயில் மனம் திரும்புகிறான். இன்னொருவனோ, வாழ்நாள் முழுவதும் குற்றம் செய்தது மட்டுமல்லாமல், சாகும்போதும் திருந்தாமல் தன் இருதயத்தைக் கடினப்படுத்திக்கொண்டு, “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்” என்று இகழ்ந்து பேசி, மேலும் குற்றம் செய்கிறான். இதைக் கண்ட அடுத்தவன் இவனைக் கடிந்துகொண்டு, “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்கிறான்.
அது மட்டுமல்லாமல், “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று இயேசுவிடம் கூறினான். அவனது உள்ளத்தின் எண்ணங்களை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தான் பாவி என்றும், சாகும் முன்பு கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற வேண்டும் என்றும் அவன் உணருகிறான். மேலும் இயேசு குற்றவாளியாக மரிக்கவில்லை என்பதையும், மனுக் குலத்தின் பாவத்திற்காக மரிக்கிறார் என்பதையும் இவன் புரிந்துகொண்டான். அது மட்டுமல்லாமல், இவர் இரட்சகர் என்றும், சிலுவையில் மரிக்கிற இவர் ஒருநாள் அரசாளுவார் என்றும், அந்த ராஜ்யத்தில் அவரோடுகூடத் தானும் இருக்க வேண்டுமென்றும் இவன் விரும்புகிறான். இப்படி தன்னுடைய வாழ்க்கையில் திருந்தும்படியாக அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்தக் கடைசி வாய்ப்பை இவன் சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். பாவ மன்னிப்பைப் பெற்று, மோட்சத்திற்குத் தகுதியுள்ளவனாகி விட்டான். இன்னொருவனோ, அவனுக்கு மரணத் தறுவாயில் கொடுக்கப்பட்ட இறுதி வாய்ப்பையும்கூடத் தவற விட்டுவிட்டான்.
இன்றைக்கும் மனிதர்கள் இப்படி இரண்டு விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்த இரண்டு மனிதர்கள் மூலம் காண முடிகிறது. இந்த மனிதர்களுக்கு நடுவேதான் இயேசு சிலுவையில் தொங்கினார்.

3 “இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).

இயேசு பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக இரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும், சிலுவையின் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை இரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன், “உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் உருவிப்போம்” என்று தீர்க்கதரிசனமாக மரியாளுக்கு அறிவித்திருந்தார். இதெல்லாம் அறிந்தவளாகத்தான் இயேசுவின் தாயாகிய மரியாள் சிலுவையின் அருகில் நின்றிருந்தாள். ஆகவேதான் அவள் மார்பில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கவில்லை.
இயேசுவும் இவைகள் எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், அந்த வேதனையின் நேரத்தில்கூடத் தன்னுடைய தாயின் எதிர்காலப் பராமரிப்பிற்குத் தேவையானதைச் செய்தார். சிலுவையில் தொங்கும்போதுகூட, “உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற கட்டளையின்படி தன் தாயை யோவானிடத்தில் ஒப்படைத்தார். இது இயேசு கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளத் தவறவில்லை என்பதையும், நாமும் நம்முடைய பெற்றோரைக் கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

4 “ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).

ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.
நல்ல காரியங்களுக்காக உயிரை விட்ட மகான்கள் தைரியத்தோடும், சந்தோஷத்தோடும் தங்கள் உயிரை விட்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அப்படியானால், இவர் மட்டும் ஏன் இப்படி மிகுந்த சத்தமிட்டுக் கதற வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு மரிக்க வேண்டியதுதானே என்றும் சிலர் கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், உலகத்தில் எவரும் இதுவரை இப்படிப்பட்ட ஓர் கோர மரணத்தை அனுபவித்ததில்லை, அனுபவிக்கப் போவதுமில்லை. உலகத்தின் பாவம் முழுவதும் அவர்மீது அன்றைக்கு சுமத்தப்பட்டது. அந்தப் பாவத்திற்கான தண்டனையையும் அவர் தம்மீது ஏற்றுக் கொண்டார். இது எவருமே அறிந்திராத சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. மேலும் இவர் நித்திய நித்தியமாக கடவுளோடுகூட இருந்த தேவகுமாரன். ஆனால், இவர் மனுக் குலத்தின் பாவத்தை சுமந்தபோது, பாவத்தை நோக்கிப் பார்க்கக்கூடாத சுத்தக் கண்களை உடைய தேவன் இவரிடத்தில் இருந்து தமது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. இது எல்லா சரீர வேதனையைக் காட்டிலும் மிகப் பெரிய வேதனையை இவருக்கு உண்டாக்கிற்று.
ஆனால் இதன் மூலம் மனுக் குலத்திற்கு மிகப் பெரிய நன்மைகளும் உண்டாயிருக்கிறது. கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத் தத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மேலான வாக்குத் தத்தம் “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்கிற வாக்குத் தத்தம்தான். நம்மில் ஒருவரையும் கடவுள் கைவிடாமலும், விலகாமலும் இருக்க வேண்டும் என்பதால்தான், இந்த ஒருவர் மீது நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் சுமத்தி, இவரைச் சிலுவையில் அதன் நிமித்தம் கைவிட வேண்டியதாயிற்று. நம்மில் ஒருவரையும் ஒருபோதும் கைவிடாமல் இருப்பதற்காகவே கடவுள் இயேசுவைச் சிலுவையில் கைவிட்டார். தாங்கிக்கொள்ள முடியாத இந்த வேதனையின் காரணமாகத்தான் இயேசு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறினார்.
இதையெல்லாம் அறிந்து கொள்ளாத காரணத்தினால்தான் சிலர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரால் நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும் என்று கேட்கிறார்கள்.

5 “தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)

வேத வாக்கியம் நிறைவேறத் தக்கதாக “தாகமாயிருக்கிறேன்” என்றார் என்று யோவான் கூறுகிறார். பழைய ஏற்பாட்டிலே “என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்கீதம் 22:15), “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று சிலுவையைக் குறித்து ஏற்கனவே தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது. மனிதனுக்காக அவனுடைய நரக வேதனையை இவர் அனுபவித்தார். எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் நரக வேதனையை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இவர் அந்த வேதனையை ஏற்றுக்கொண்டார். நாம் எல்லோரும் பரலோக இன்பத்தை அனுபவிப்பது மட்டுமே கடவுளுடைய விருப்பம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் தாகமாக இருந்த அவர் புளித்த காடியைக் குடிக்க வாங்கிக்கொண்டது நம்மீது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாபங்களை அவர் அகற்றிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
முன்னோர் செய்த பாவத்தின் பலனை நாங்கள் இன்றைக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட, “பிதாக்கள் திரட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின” என்று அந்தக் காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. இந்த பழமொழி ஒருநாள் இல்லாமல் போகும் என்று பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே கடவுள் சொல்லியிருந்தார்.

6 “முடிந்தது” (யோவான் 19:30)

கிரேக்க மொழியில் ‘டெட்டெலெஸ்டாய்’ (tetelestai) என்ற வார்த்தையைத்தான் தமிழில் ‘முடிந்தது’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் காட்ட ‘டெட்டெலெஸ்டாய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி னார்கள். அதாவது, இந்தக் காலத்தில் ரசீதுகளில் ‘PAID’ என்று முத்திரை குத்துவதுபோல, அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஆகவே இயேசு சிலுவையில் தொங்கின போது ‘முடிந்தது’ என்று சொன்னது நமது பாவ மன்னிப்பிற்கான முழுக் கிரயத்தையும் அவர் செலுத்திவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
‘முடிந்தது’ என்கிற அந்த ஒரு வார்த்தையில் பல காரியங்கள் அடங்கியிருக்கின்றன.
(i) சிலுவையைக் குறித்து கடவுள் திட்டமிட்டு முன்னறிவித்திருந்த எல்லாம் நிறைவேறி முடிந்தது.
(ii) பழைய ஏற்பாட்டில் அவரு டைய பாடுகளைக் குறித்து சொல்லப்பட்ட அத்தனை காரியங் களும் நிறைவேறி முடிந்தது.
(iii) உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது. எத்தனையோ தீராத வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தீர்வு வந்ததுபோல மனுக் குலத்தின் பாவ வியாதிக்கும் தீர்வு வந்துவிட்டது.
(iv) இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
(v) இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
(vi) மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.

7 “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)

இயேசு தம் ஜீவன் போகிற வேளையில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு இப்படிச் சொன்னார். இயேசு தம்முடைய பெலன், சக்தி எல்லாவற்றையும் சிலுவையில் இழந்து ஒன்றும் செய்ய இயலாதவராய் மரணம் அடையவில்லை. அதாவது, அவர்கள் அவரைக் கொலை செய்ததினால் அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவாதிபதி. ஜீவனைக் கொடுக்கிறவர். அவரிடமிருந்து யாரும் ஜீவனை எடுக்க முடியாது. அவரே அதைக் கொடுத்தால்தான் உண்டு. ஆகவே, அவரே அதை ஒப்புக்கொடுக்கிறார். அவர் தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
பொதுவாகச் சிலுவையில் மரிப்ப வர்கள் உயிர்போகும் நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறி, தலையை நன்றாகத் தூக்கி, மூச்சு விட முயற்சிப்பார்களாம். மூச்சு விட முடியாமல், உயிர்போன பிறகு தலை தொங்குமாம். ஆனால் இயேசுவோ, தலையைச் சாய்த்து, பிறகு தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார். இவர்கள் சாகடித்ததால் அவர் சாகவில்லை. அவரே தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது.
இயேசுவின் சிலுவை மரணம் கடவுள் காலகாலமாய்த் திட்டமிட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடப்பித்த ஒரு சரித்திரச் சம்பவம் என்பதை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்ப்பது அவசியம்.

நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்

என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Wednesday, January 22, 2014

நம்பிக்கை என்னும் அழகிய நீரூற்று....

ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டி ருந்தான். திடீரென்று கால் தவறி அதள பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.

பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.

அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி!

அசரீரி : ‘நீ என்னை நம்ப மாட்டாய்!.

மனிதன் : கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.

அசரீரி : எனக்கு நம்பிக்கை இல்லை.

மனிதன் : கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.
அசரீரி : சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு.

மனிதன் : வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?

அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.

நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்க கூடாது.
ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றி முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர்தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

நம்பிக்கைதான் ஆதாரம்

தொழிலாளி மீது முதலாளி வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அந்த நிறுவனத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த முதலாளி மீது தொழிலாளிகள் வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் அவர்களை உண்மையாக, உற்சாகமாக உழைக்கத் தூண்டுகிறது.

கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உறவினர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பரஸ்பர நம்பிக்கை எனப் பிறர் மீது வைக்கும் நம்பிக்கைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பஸ்ஸில் போகிறோம் என்றால் அந்த டிரைவர் நம்மை பத்திரமாகக் கொண்டு போய் சேர்ப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அதில் பயணம் செய்கிறோம்.
இது பஸ்ஸுக்கு மட்டுமல்ல, விமானம், ரயில், ஆட்டோ, கார் என்று எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.

நம்பிக்கையின் அஸ்திவாரத்தில்தான் இந்தச் சமூக அமைப்பு சுழன்று கொண்டி ருக்கிறது. பெரிய வலைப் பின்னல்களைப் போல, ஒவ்வொருவருக்கிடையேயும் மெல்லிய நூலிழை போன்ற நம்பிக்கை இழையோடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருக்கிடையேயும் எந்த பந்தமோ, உறவோ, சம்பந்தமோ இல்லாவிட்டாலும், நம்பிக்கை என்ற நூலிழையில் எல்லோரும் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஓட்டலுக்கு போகிறீர்கள். தோசை ஆர்டர் செய்கிறீர்கள். தோசை வந்தவுடன் சாப்பிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறீர்கள்.
இந்த சம்பவத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கை இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
அந்த ஓட்டலில் உங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்தவரை நீங்கள் முன்னே, பின்னே பார்த்தது கிடையாது. அதை உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்த சப்ளையருக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த தோசையை நீங்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாப்பிட்டீர்கள்.

நீங்கள் சாப்பிட்ட தோசையில் கெட்டது எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில் தானே அதை சாப்பிட்டீர்கள்? இந்த நம்பிக்கை எங்கிருந்து வந்தது?

முன்பின் பார்த்திராதவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையை எந்த வகையில் சேர்ப்பது?
நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.
ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.

அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.

இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.

வெறும் முயற்சி அல்ல

அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.
மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.

ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.

தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.

‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.

நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழ காக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.