Thursday, November 27, 2014

ஸத்குரு என்பவர் யார்?

ஸத்குரு என்பவர் யார்?

ஒருவரது மரபுரிமைப் பிழைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவந்து, உடல், உயிர், உலகம் இவை யாவும் ஒன்றினை ஒன்று தொடர்புடையவை என்பதை அறியவைப்பவரே சத்குரு ஆவார்.
மனிதன் அவனது மனத்தின் காரணமாகவே மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான். தானே "ஜீவன்" என்று உணர்ந்து தனது அஹங்காரத்தின் மேலீட்டால் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த உணர்வே மனிதனிடம் பிழைபட்டதாக உருவாகியுள்ள மாயை ஆகும். இது மனிதன் மனத்தில் தோன்றும் அறியாமை ஆகும்.
இந்த அறியாமையிலிருந்து விடுபட மனிதர்கள் தாமாகவே முயற்சிசெய்து, அதன் ஆணிவேரைப் பிடுங்கி எறிவதற்கு அவன் "சுயவிசாரணை" நடத்தத் துவங்க வேண்டும்.
இந்த அறியாமை எப்படி உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை உணர்த்துவதுதான் குரு உபதேசம்.
இதையும் தாண்டி, சத்குருவானவர், அவனது பல பிறவிகளின் அழுக்குகளையும் அவற்றின் அச்சுகளையுமே ஒரே நொடியில் விலக்கி அல்லது அழித்து, தனது பக்தனைப் பரிசுத்தமடையச் செய்கிறார்.
மனிதன் தனது அறியாமை என்னும் கணக்கைச் சரிபார்க்கத் தவறும் போதுதான். அவன் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் அல்லலுறுகிறான்.
மனிதன் தனது வாழும் காலத்திலேயே தனது பூர்வ ஜென்மக் கணக்குகளையும் சரிபார்த்து, எவ்வளவு தூரம் அவற்றைக் கழிக்க முடியுமோ அவ்வளவு தூரம் கழித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். மிச்சம் சொச்சத்தை அடுத்துவரும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. அஞ்ஞானம் என்பது,
1. நான் ஒரு ஜீவன் (உயிர், ஜந்து) என்று நினைப்பது.
2. உடம்பே ஆத்மா (நானே உடல் என்பது)
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வெவ்வேறானவை
4. நான் கடவுள் அல்ல.
5. உடல், ஆத்மா என்று எதுவும் இல்லை என்று நினைப்பது அல்லது அந்த உண்மையை அறியாமல் இருப்பது.
6. கடவுள், உலகம், ஜீவன் இவையெல்லாம் ஒன்று என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருத்தல்.
இவ்வாறான அஞ்ஞானங்களை, அறியாமைகளைப் பிழைகள் என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
குருவானவர், நமக்குப் பிறவிக் கடலை நீந்திக் கரைசேர வழிகாட்டுகிறார். ஆனால், சத்குருவோ நம்மைக் கரைக்கே கொண்டு சேர்த்துவிடுகிறார். அப்படிப்பட்ட சத் குருவானவர், மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி என்ற குக்கிராமத்தில் பல வருடங்கள், பக்கிரிபோல வாழ்ந்துவந்தார். அவர், தன்னை நாடிவந்த பலருக்கும், உணவளித்து உறைவிடம் தந்து, நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து, இன்னும் சிலரை உய்வித்து, இவ்வுலகில் இயற்கையில் கலந்து, ஸர்வ வியாபியாக இன்றும் மக்களிடையே சேவை செய்துவருகிறார்.
சத்குரு என்பவர் தனது பௌதீக உடலை நீக்கிய பிறகும், தொடர்ந்து மக்கள் நலனில் கருத்துக் கொண்டு செயலாற்றிக்கொண்டிருப்பவர் ஆவார். இப்படிப்பட்ட சத்குருவினை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டே இருந்தால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன. மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது. இவ்வுலக வாழ்வில் நமது துயரங்கள் நீக்கப்படுகின்றன. ஆகவே, தங்கள் நலத்தை விரும்புவோர் ஷீரடி சாயிபாபா போன்றோரின் சத்சரிளதைகளைத் தினமும் படித்துக்கொண்டே வர வேண்டும்.
ஷீரடி சாயிபாபா எங்கு, எப்போது, யாருடைய மகனாக பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரும் தனது பூர்வீகத்தைப் பற்றிய எந்த விபரத்தையும் யாருக்கும் எப்போதும் தெரிவித்தது கிடையாது. அதைத் தெரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவும் இல்லை. அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஷீரடி என்னும் கிராமத்தில் வாழ்ந்திருந்தார். 1918ஆம் வருடம், அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தமது பௌதீக உடலை நீத்துவிட்டு, தனது சூக்ஷ்ஷம உடல் வாயிலாக இந்த நிமிடம் வரை, தனது பக்தர்களிடம் உலாவந்து, அவர்களைக் காத்துவருகிறார்.
ஷீரடி சாயிபாபா தன் காலம் முழுவதும் மருத்துவராகவே இருந்து தனது மக்களுக்கு அருள்பாலித்து இருக்கிறார். இவரது சூஷ்க்ஷம சக்தி இந்த அண்டசராசரத்திற்கு அப்பாலும் பரவியிருப்பதால்தான், இன்றும் பூவுலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சத்குருமார்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவதரிக்கிறார்கள். அவர்களை அண்டி, சராசரி மனிதர்கள் தமது பூர்வ ஜென்ம பாபங்களைக் கழுவிக்கொண்டு இருக்கும் காலத்தில் நாம் தெரிந்தே செய்த பாவங்களையும் கழுவிக்கொண்டு, நம் மனது, அறிவு, ஆன்மா என அனைத்து சங்கதி களையும் சுத்தப்படுத்திக் கொண்டு, பிறவிக் கடலைக் கடந்து கடைத்தேற வேண்டும்.
ஷீரடி பாபா ஸர்வவியாபியாக இருந்தார். இப்போதும் அப்படியே இருக்கிறார். அவர் சகல ஜீவராசிகளையும் நேசித்தார். எல்லா ஜீவராசிகளிடத்தும் ஆத்மா இருப்பதைக் கண்டவர். வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கியவர். மனிதர்களிடம் இரக்கம் கொண்டவர்.
தான் வெளிப்படையாக ஒரு பக்கிரியைப் போல வாழ்ந்தவராயினும், அவரது ஆன்மா எல்லா உயிர்களிடையேயும் சென்று வாழ்கிறது என்பது உண்மை.
ஞானிகள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக இவ்வுலகிற்கு வருகைதருகிறார்கள். அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியே அமைதியாகவும் எளிதாகவும் இயற்கையுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றனர்.
இன்றளவும் ஷீரடி சாயி ஸர்வலியாபியாகவும், தான் வாழ்ந்த ஷீரடி கிராமத்தின் ஜீவ நாடியாகவும் வாழ்ந்துவருகிறார்.
ஒவ்வொரு யுகத்திற்கும் யுகதர்மம் என்று ஒன்று உண்டு. அதில் கலியுகத்தில் "தானம்" செய்வது யுகதர்மமாகக் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான மிகக் குறைந்த அளவுபொருட்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதைப் பிறருக்குத் தந்துவிட வேண்டும். யாரிடம் இப்படிப்பட்ட யுகதர்ம நீதி சார்ந்த எண்ணம் உள்ளதோ அவர்களிடம் ஷீரடி சாயி நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார்.
ஷீரடி சாயிபாபா, தமக்கு என எதையும் வைத்துக்கொள்ளாமலேயே, கிடைத்தவற்றை வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கிவிட்டார்.
துணி, பணம் முதலியனவற்றைத் தானம் செய்ய நாம் யோசிக்க வேண்டும். ஆனால், அன்ன தானம் செய்ய, அப்போது நம்மிடம் உள்ள உணவைப் பிறர் பசியாற்றி, நாமும் உண்ணும்போது நம் மனது நிறைவடைகிறது. இதைத்தான் ஸாயி விரும்பினார். நாமும் தினமும் பசியுள்ள ஒரு மனிதனுக்கோ அல்லது ஜீவராசிக்கோ உணவளித்து, நமது சத்குருவான, ஸர்வவியாபியான சாயி பாபாவை நம்முடனே தக்கவைத்துக் கொள்வோம்.
ஞானிகளும் சத்குருவானவர்களும் தமது பௌதீக உடலிலிருந்து, புலன்களுக்கு அப்பாற்பட்ட சூஷ்ம சக்தியால், தமது பக்தர்களின் மனத்தில் ஊடுருவும் தன்மையைப் பெற்றுள்ளனர். பக்தர்கள், இவர்களைச் சரணாகதியடையும்போது, அந்த சூஷ்ம சக்தியை அவர்கள் செயல்பட வைக்கிறார்கள். இதனால், பக்தர்களின் நோய்தீர்த்தல், மனத்துன்பம், துயரங்களைப் போக்குதல், போன்ற அனைத்துக் காரியங்களையும் அவர்கள் முடித்துத் தருகிறார்கள்.
இவர்கள் பௌதீக உடலம் இவ்வுலகிலிருந்து நீங்கிய பின்பும், அதே அளவும் அதைவிட மேலேயும், எப்போதும் போலச் செயல்படும் மகான்களே ஞானிகளும் சத்குருவானவர்களும் என்பதை நாம் சாயிசத்சரிதம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடி சாயி தனது வாழும் காலத்திலும் பிறகும் பல நல்ல செயல்களைச் செய்து வருகிறார். 2018ஆம் வருடம் ஷீரடி சாயிபாபா மறைந்து நூறு ஆண்டுகளைத் தொடும் வருடமாகும்.
பாபா சில வருடங்கள் இப்பூவுலகில் இருந்தாலும், அவர் புகழ் திக்கெட்டும் பரவிக்கிடந்தது. அவரை, வண்டுகள் போல பக்தர்கள் மொய்த்தனர். இன்னும் ஷீர்டி பாபா பலரைத் தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கிறார். நாளக்கு நாள் ஷீரடி நோக்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
பாபாவின் துனி (நெருப்பு) நமது பாபங்களைப் பொசுக்கும் நெருப்புக் குண்டமாகும். அதிலிருந்து கிடைக்கும் விபூதி (யுதி) நமக்கு நோய்தீர்க்கும் மருந்தாகும். ஷீரடி பாபாவின் மகிமைகளைக் கேட்டு, ஆங்காங்கே மக்கள் பாபாவின் கோயில் தலங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கெல்லாம் பாபாவை மக்கள் மனமுவந்து, மனமுருகி ஏற்றுக்கொள்கிறார்களோ அங்கெல்லாம் அவர் உடனே வந்து தன் மக்களைப் பாதுகாக்கின்றார்.
"அல்லா மாலிக்" என்று இறைவன் ஒருவனே என்ற அத்வைதத் தத்துவக் கொள்கைகளைத் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டிய மகான் ஷீரடி பாபா என்பதில் ஐயமில்லை.
உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் ஆத்ம பாவனையுடன் நாம் காணப் பழகும்போது, வேற்றுமைகள் மறைந்துவிடுகின்றன. இந்த அத்வைத, ஆத்மபாவனையே பிராமணனை இன்னமும் இவ்வுலகில் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, பிரம்மஞானத்தை வேண்டியும் பர தத்துவத்தைத் தரிசித்தும், நமக்கு வழிகாட்டிகளான ரிஷிகள், முனிவர்கள், ஞானிகளைப் பின்பற்றியும் எல்லாவற்றையும்விட, எளிமையாக நாடி, நமது பாவங்களைக் கழுவி நமது ஆத்மாவை ஒளிபெறச் செய்யும் சத்குருவான ஷீரடி பாபாவைத் தினமும் தொழுது நமது வாழ்நாளிலேயே நமது கர்மாக்களைத் தொலைத்து, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரை சேர்வோமாக!
கட்டுரையாளர்:
திருமதி. பாகீரதி இராமனாதன்
கட்டுரை ஆதாரம்: சாயிசத் சரிதம்

Wednesday, November 26, 2014

உதடுகள் உச்சரிக்கட்டும்!

என் இறைவனே சாயி பாபா!
என் மீது கருணை காட்டுங்கள் பிரபு! எத்தனை விதமான துன்பங்கள் என்னை சூழ்ந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்து எனக்கு உதவி செய்யுங்கள்.
கவலைகளாலும் துன்பத்தாலும் கடனாலும் அவமானத்தாலும், அலட்சியப்படுத்தப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் நொந்து நைந்துபோன இதயத்தை மட்டுமே வட்டும் ஒட்டும் போட்டு வைத்திருக்கிறேன். இதை எனது அர்ப்பணமாக ஏற்றுக்கொண்டு உதவி செய்யுங்கள் பிரபு!
என் தன்னம்பிக்கை தடுமாறுகிறது, நான் நிலைகுலைந்துவிடுவேன் என மற்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள்.
மனம் சொந்து, மனம் சோர்ந்து போயிருக்கிறேன். என் குடும்பத்தின் நிம்மதி பறிபோய்விட்டது. நாங்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு மகிழ்ச்சியோடு பேசிக் கொண்ட நாட்கள் மாதங்களாகி விட்டன.
என் கையை வைத்தே கண்களை குத்தச் செய்த நிகழ்வுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். தூரத்தில் உள்ளவர்களாலும், அருகில் இருப்பவர்களாலும் ஆபத்தினருகில் தள்ளப்பட்டிருக்கிறேன்.
கடனாலும், தடையாலும், தோல்வியாலும் துவண்டு போன நிலையிலிருக்கும் என்னை கண்ணெடுத்துப் பாருங்கள் என் கடவுளே! என்னால் வளர்க்கப்பட்டவர்களும், என் உதவிக்காகக் காத்திருந்தவர்களும் என்னைப் புறக்கணித்தார்கள். நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினார்கள்.
என்னை உண்மையாக நம்பியவர்களும் இப்போது தடுமாறுகிறார்கள். எனது நம்பிக்கை இழந்து போகும் செய்திகளால் நான் கவலைப்படுகிறேன், தேற்றுவார் யாருமின்றி தத்தளிக்கிறேன்.
போற்றியவர்கள் தூற்றவும், நம்பியவர்கள் விலகவும், விரும்பியவர்கள் வெறுக்கவும் ஏற்ற சூழல்களை உருவாக்கிவிட்டார்கள்.
விரோதிகள் ஆயுதங்களோடு காத்திருக்கிறார்கள், துரோகிகள் நான் வரும் வழியில் பள்ளம் தோண்டி, அதை இலைகளால் மூடி மறைத்து என்னை வீழ்த்திட பதுங்கியிருக்கிறார்கள்.
ஆபத்தில் கதறிக் கூப்பிட்ட கஜேந்திரனைப்போலக்கூட கத்த முடியாமல், துக்கத்தால் அடைபட்ட தொண்டையுடன் மனதுக்குள் கதறுகிறேன்.
என் இறைவனே சாயி நாதா! என்னை கைவிட்டு விடாதீர்கள்.
பூர்வங்களில் உங்களோடு இருந்ததையும், உங்கள் நாமத்தை இடை விடாமல் உச்சரித்துக்கொண்டிருந்ததையும் மறந்துவிடாதீர்கள். நான் உங்களையே எனது பலமாகக் கொண்டிருக்கிறேன். என்னை தாக்க வருவோருக்கு உங்களையே கேடயமாகக் காட்டி என்னை காப்பாற்றிக்கொள்ள முனைகிறேன்.
எல்லோரும் கைவிட்டாலும், பெற்றோர், உடன் பிறந்தோர் வெறுத்து ஒதுக்கினாலும் என்னை மாறாத அன்புடன் நேசித்து உதவி செய்கிறவர் நீங்கள் என்பதை பிறருக்குத் தெரியபடுத்துங்கள்.
தங்களுக்கு நன்மை நடப்பதற்காக என்னைத்தேடி வருவோருடன் எனக்காக நீங்கள் இருப்பதையும், எனது விரோதிகள் என்னை நெருங்காமல் இருக்க அவர்கள் மத்தியில் எனது சார்பாக இருப்பதையும் பிறர் உணரும்படி செய்யுங்கள்.
எனது உழைப்பையும் அதன் பலனையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட என்னோடு இருந்து கொண்டே எனக்கு எதிராகச் செயல்படுகிறவர்களிடமிருந்து என்னை நீங்கள் காப்பாற்றுவதை பிறர் உணர்ந்துகொள்ளட்டும்.
என்னை நிர்க்கதியாக்கி தனிமையில் விட்டு, எனது சோகமுடிவுக்காக காத்திருப்பவர்கள் ஏமாந்து போகட்டும். மந்திரத்தாலும் தந்திரத்தாலும் என்னை மயக்கி கொள்ளையிடவும், கொல்லவும் முனைகிறவர்கள் கண்களுக்கு என்னை மறைத்து, மந்திர தந்திரக் கட்டுக்களில் இருந்து என்னை விடுதலை செய்யுங்கள்.
என்னுடைய மலை போன்ற பிரச்சினைகளையும் தோள் மீது சுமந்துகொண்டு, வலது கரத்தைப் பிடித்து நீங்கள் என்னை வழிநடத்துவதை மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.
துக்கமான நாட்களிலும், சோகமான நேரங்களிலும் நான் உங்கள் நாமத்தையே உதடுகளால் உச்சரித்துக்கொண்டு இருக்கிறேன். எமனும் பயப்படுகிற உங்கள் திருப்பெயரின் சக்தி முன்பு எனது கஷ்டங்கள் நிற்காது என்பதை நான் உணர அருள் செய்யுங்கள்.
எல்லோரும் தங்கள் செல்வங்களால் உங்களுக்கு சேவை செய்து, மகிழ்ச்சியால் துதிக்கிறார்கள், தங்கள் முதற்பலனை காணிக்கையாகத் தருகிறார்கள். இந்த ஏழையிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?
உண்ணும் ஒவ்வொரு பருக்கையும், பருகும் ஒவ்வொரு துளி நீரும் நீங்கள் எனக்கு அளிக்கிறீர்கள். நீங்கள் தருவதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் கைகளில் என்னை ஒப்படைக்காதீர்கள்.
எனது புலம்பல்கள் பாடல்களாகவும்,எனது அனுபவங்கள் பிறருக்குக் கீர்த்தனைகளாகவும் அமையட்டும். நிலைத்த பக்தியும் நீடித்த பொறுமையும், கடுமை காட்டாத முகமும், புறங்கூறாத இதயமும் எனக்குத்தந்தருளும். என்றென்றைக்கும் உங்களுக்காகக் காத்திருக்கிற கண்களைத் தந்தருளும்..
நீங்களே எனது புகலிடம் என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எனக்குள் மாற்றத்தைத் தாருங்கள் சாயி நாதா!
இந்தப் பிரார்த்தனைகளோடு தங்கள் திருவடிகளை சரணடைகிறேன்.
ஜெய் சாய்ராம்.

Monday, November 24, 2014

ஷீரடி சாய் பாபாவின் இறுதி ஊர்வல புகைப்படங்கள்

பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.

பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்.



Saturday, August 2, 2014

அன்பர் ஒருவரின் கேள்வி: கோபம் என்பது என்ன ?

சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம்
சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?
ஓஷோவின் பதில்: கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது
விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை
தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற
விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை.
அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா
என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது
விளையாட்டுத்தனமாகவும் இரு.
விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில்
அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது
விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது,
கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர் போல இருந்து பழக வேண்டும்.
நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது
தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னை எரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன
வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும்
தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே
கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னை எரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்கு செல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தை உண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒரு
புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும்
அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.
--- ஓஷோ ---

Tuesday, July 29, 2014

மகிழ்ச்சியின் சாவி மலைப்பிரசங்கம்....

மனித நிலையிலிருந்து தெய்வீக நிலைக்கு மாறுவதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சுட்டிக்காட்டுகிறது. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்றுக்கொண்ட நிலையைத் தீக்‌ஷை பெறுதலாக இந்து தர்மம் சுட்டிக்காட்டுகிறது. ஞானம் பெற்று நிர்வாணம் அடைதலைப் புத்த தர்மம் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்தவம் ‘ஞானஸ்நானம்’ பெற்றுக்கொள்ளுதலைக் கடைப்பிடிக்கிறது.

இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் எல்லையாக இருப்பது யோர்தான் நதி. இந்த நதியில் இறங்கி, யோவான் தீர்க்கதரிசியால் ‘ஞானஸ்நானம்’ எனும் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டார் இயேசு. அப்போது அவருக்குச் சுமார் 30 வயது. அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட பிறகே கிறிஸ்து ஆனார்; அதன் பொருள் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” (லூக்கா 3:21, 22) என்பதாகும். அதன் பிறகு மூன்றரை ஆண்டுக் காலம் இயேசு தெய்வீக நிலையில் நின்று போதனைகள் செய்யத் தொடங்கினார்.

அவரது போதனைகளில் மிகப் பெரியதாகவும் மிகமிக முக்கியமானதாகப் போற்றப்படுவது அவரது மலைப்பிரசங்கம் (Sermon on the Mount). மனித குலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கான பாதையை அவர் மலைப்பிரசங்கத்தில் செய்த போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன. இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு தனது நூலில் 5 முதல் 7 வரையான அதிகாரங்களில் மலைப்பிரசங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

இவற்றில் காணப்படும் வசனங்கள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கின்றன. எனினும் மலைப்பிரசங்கத்தின் போதனைகள் இங்கே சுருக்கமாகத் தரப்பட்டிருக் கின்றன. முடிந்தவரை விவிலிய மொழி சிதையாவண்ணம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை உங்கள் பொக்கிஷ அறையாகிய இதயத்தில் சேமித்துக்கொள்ளுங்கள்

உப்பும் ஒளியும்

மக்கள் கூட்டத்தைப் பார்த்த அவர், மலைமீது ஏறினார்; அவர் உட்கார்ந்தபோது, சீடர்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் இயேசு:
“நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு உவர்ப்பிழந்துபோனால், அதற்கு எப்படி மீண்டும் உவர்ப்பூட்ட முடியும்? வெளியே கொட்டப்பட்டு மனிதரால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறெதற்கும் அது உதவாது.
“நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; உங்கள் கண் பொல்லாததாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளடைந்து இருக்கும்.
மலைமீது இருக்கும் நகரம் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள்.

கோபமும் சமாதானமும்

“கொலை செய்யாதீர்கள்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தந்தை உங்கள் குற்றங்களை மன்னிப்பார்;
உங்கள் காணிக்கையைச் செலுத்த ஆலயத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள் மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், உங்கள் காணிக்கையைச் செலுத்தும் முன் முதலில் அவரிடம் போய்ச் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
“உங்கள்மீது வழக்கு தொடுக்கிறவரோடு நீங்கள் நீதிமன்றத்திற்குப் போகும் வழியிலேயே விரைவாகச் சமாதானம் செய்துகொள்ளுங்கள்.

எதிரிகள் நண்பர்களே

“‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், உங்களுக்குத் தீங்கு செய்கிறவருக்குத் தீங்கு செய்யாதீர்கள்; எவராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; வட்டியில்லாமல் கடன் வாங்க வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்
“‘சக மனிதர்மீது அன்பு காட்ட வேண்டும், எதிரியையோ வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; இப்படிச் செய்யும்போது, உங்கள் பரலோகத் தந்தையின் பிள்ளைகளாக இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர் களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பொழியச் செய்கிறார்

விளம்பரம் வேண்டாம்

“மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தானதர்மம் செய்யும்போது, தம்பட்டம் அடிக்காதீர்கள்; உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குத் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அப்போது, நீங்கள் செய்யும் தானதர்மம் மற்றவர்களுடைய பார்வைக்கு மறைவாக இருக்கும்; எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் நீங்கள் செய்வதைப் பார்த்து உங்களுக்கு உரிய பலனை அளிப்பார்.

நினைப்பும் நிஜமும்

“வாழ்க்கைத் துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இச்சை உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் உள்ளத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.

கவலை வேண்டாம்

“ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், எஜமானன் ஒருவரை வெறுத்து மற்றவரை நேசிப்பார்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை உதாசீனப்படுத்துவர். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஒரே நேரத்தில் அடிமையாக இருக்க முடியாது.

அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்பது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உங்கள் உயிரும் உடையைவிட உங்கள் உடலும் அதிக முக்கியம் அல்லவா? வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; என்றாலும், உங்கள் வானுலகத் தந்தை அவற்றுக்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?

அதனால், முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.

Thursday, July 10, 2014

உன் கர்மாக்களை......

உனது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், உன் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படாதே. அவர்கள் உன் கர்மாக்களை, உனது பாவங்களை உண்டும், அனுபவித்தும் உன்னை விடுதலை செய்கிறார்கள்.

நீ இழந்து போனதையும், தொலைத்துவிட்டத்தையும் நான் அறிந்திருக்கிறேன். என் கண்கள் காணாமல் எதுவும் நடக்க முடியுமா? இருந்தும் நான் மவுனமாக இருப்பதற்குக் காரணம், அவை உனக்கு நன்மை விளைவிக்கும். பிற்காலத்தில் பெரும் பலனோடும், வட்டியோடும், ஆசீர்வாதத்தோடும் மீண்டும் உன்னிடமே வந்துசேரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பதால்தான்!

என் குழந்தாய்! உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. நீ எனக்காகப் பொறுமையாக காத்திரு. என் அருள் உன்னை அணுகுவதற்கு மனதை என்னிடம் திறந்துகொடு. - ஶ்ரீ சாயியின் குரல்.

Wednesday, July 9, 2014

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!



-------------------------------------------------------------------
1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)



தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..
துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?
எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது.